
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 50ஆவது லீக் போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தியது.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் காயம் காரணமாக வநிந்து ஹசரங்கா மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் விளையாடாத நிலையில் ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா ஆகியோருக்கு லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களின் அரைசதங்களையும் பூர்த்தி செய்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 61 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரியான் ரிக்கெல்டன் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து, 9 பவுண்டரிகளுடன் 53 ரன்களைச் சேர்த்திருந்த ரோஹித் சர்மாவும் விக்கெட்டை இழந்தார்.