
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
சென்னை சேப்பாக்கில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணைத் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டனும் 13 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் கலீல் அஹ்மத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு அதிரடி வீரர் வில் ஜேக்ஸும் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை ஓரளவு தாக்குப்பிடித்ததுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் சூர்யகுமார் யாதவ் 29 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ராபின் மின்ஸும் 3 ரன்னுடன் ஆட்டமிந்தார். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மாவும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.