Advertisement

ஐபிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது சிஎஸ்கே!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Advertisement
ஐபிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது சிஎஸ்கே!
ஐபிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது சிஎஸ்கே! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 23, 2025 • 11:14 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 23, 2025 • 11:14 PM

சென்னை சேப்பாக்கில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணைத் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டனும் 13 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் கலீல் அஹ்மத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

Trending

அவரைத்தொடர்ந்து மற்றொரு அதிரடி வீரர் வில் ஜேக்ஸும் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை ஓரளவு தாக்குப்பிடித்ததுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் சூர்யகுமார் யாதவ் 29 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ராபின் மின்ஸும் 3 ரன்னுடன் ஆட்டமிந்தார். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மாவும் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மேற்கொண்டு அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட நமன் தீர் 17 ரன்களிலும், மிட்செல் சான்ட்னர் 11 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய முன்னாள் சிஎஸ்கே வீரர் தீபக் சஹார் இரண்டு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்துள்ளது. சிஎஸ்கே தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திரா மற்றும் ராகுல் திரிபாதி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ராகுல் திரிபாதி 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறக்கிய ஷிவம் தூபே 9 ரன்னிலும், தீபக் ஹூடா 3 ரன்னிலும், சாம் கரண் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து போட்டியின் அழுத்தத்தை அதிகரித்தனர். ஆனாலும் மறுபக்கம் தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா நிதானமாக விளையாடி வந்த நிலையில், அவருடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினார். மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

Also Read: Funding To Save Test Cricket

இறுதியில் ரவீந்திர ஜடேஜா 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரச்சின் ரவீந்திரா 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 65 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணியும் நடப்பு ஐபிஎல் சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement