ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 16 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வாலும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் விராட் கோலியுடன் இணைந்த கேப்டன் ராஜத் படிதார் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினார். இதில் இருவரும் இணைந்து 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ரஜத் படிதார் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் லியாம் லிவிங்ஸ்டோன் 25 ரன்களையும், ஜித்தேஷ் சர்மா 24 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ரொமாரியோ ஷெஃபர்ட் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்னிலும், குர்னால் பாண்டியா 4 ரன்னிலும், புவனேஷ்வர் குமார் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கைல் ஜேமிசன் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து சவாலான இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 24 ரன்களை எடுத்திருந்த பிரியான்ஸ் ஆர்யா தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் மற்றொரு தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங்கும் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்ட, அதிரடியாக விளையாடி வந்த ஜோஷ் இங்கிலிஷும் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த நெஹால் வதேரா மற்றும் ஷஷாங்க் சிங் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் இதில் நெஹல் வதேரா 15 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் சிக்ஸருடன் இன்னிங்ஸை தொடங்கினாலும் அடுத்த பந்திலேயும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Also Read: LIVE Cricket Score
இதனால் பஞ்சாப் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 42 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதில் இறுதிவரை களத்தில் இருந்த ஷஷாங்க் சிங் 3 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 61 ரன்களைச் சேர்த்த நிலையிலும், பஞ்சாப் கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார், குர்னால் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியதுடன் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now