
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாளை விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்காளூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விராட் கோலி ஒருமுனையில் நிதானமாக விளையாடிய நிலையில், மறுபக்கம் பில் சால்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார்.
இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தானர். அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் பில் சால்ட் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய தேவ்தத் படிக்கல் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களை எடுத்த கையோடு நடையைக் கட்டினார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த ரஜத் படிதாரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் விராட் கோலி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லிவிங்ஸ்டோனும் 10 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.