
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் மாதம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது.
அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர்.
இதனால் நடப்பு ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 25ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு முதல் தகுதிச்சுற்று மே 20ஆம் தேதியும், எலிமினேட்டர் சுற்று 21ஆம் தேதியும், இரண்டாவது தகுதிச்சுற்று மே 23ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.