
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 61ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்க கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துகொடுத்தனர். மேற்கொண்டு அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களுடைய அரைசதங்களையும் பூர்த்தி செய்து அசத்தினர்.
அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்திருந்த மிட்செல் மார்ஷ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்தும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களில் ஐடன் மார்க்ரமும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆயூஷ் பதோனி 3 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த பூரன் - சமத் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.