
உலகின் நம்பர் ஒன் டி20 லீக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் 15 ஆண்டுகளாக நடத்தி வரும் ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது. அந்த வரிசயில் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இந்த மாதம் இறுதி 31ஆம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி வரை நடந்து முடிவடைய இருக்கிறது. ஐபிஎல் தொடரை சுவாரஸ்யப்படுத்தும் விதமாக இந்த வருடம் இம்பேக்ட் பிளேயர் எனும் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இம்பாக்ட் பிளேயர் விதி என்பது, ஆட்டத்தின் நடுவில் ஒருமுறை ஒரு வீரருக்காக மாற்று வீரரை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி நீங்கள் யாரை மாற்று வீரராகப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறீர்களோ, அதற்கு நான்கு வீரர்களை நீங்கள் ஆட்டத்திற்கு முன்பாக தெரிவித்து விட வேண்டும். பின்பு அந்த நான்கு வீரர்களில் இருந்து ஒருவரை, நீங்கள் இன்னொரு வீரருக்கு மாற்றாக, ஆட்டத்தில் ஒரு ஓவர் முடிவடையும் பொழுதோ அல்லது ஒரு விக்கெட் விழும் பொழுதோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்படிப் பயன்படுத்தப்படும் இம்பேக்ட் பிளேயர் நேரடியாக அணியில் இடம் பெற்று விளையாடும் வீரர் என்னென்ன செய்ய களத்தில் அனுமதி உண்டோ அவற்றை எல்லாவற்றையும் இவரும் செய்ய அனுமதி உண்டு. தற்பொழுது மேலும் ஒரு புதிய விதி இந்த வருட ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அது என்னவென்றால், டாஸ் போடப்பட்டு யார் முதலில் விளையாடுகிறார்கள் என்று முடிவு தெரிந்த பின்பு, இரு அணி கேப்டன்களும் எந்தெந்த வீரர்களை கொண்டு விளையாட விரும்புகிறார்கள் என்பதைத் தெரிவிக்கலாம்.