
சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அயர்லாந்து கிரிக்கெட் அணியின் லெஜெண்ட் என அறியப்படும் கெவின் ஓ’பிரையன் அறிவித்துள்ளார். ஆல்-ரவுண்டரான அவர் அயர்லாந்து கிரிக்கெட் வளர்ச்சியில் பங்காற்றிய முக்கிய வீரராக அறியப்படுகிறார்.
கடந்த 2006 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் இவர் அறிமுக வீரராக களம் இறங்கினார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அசோசியேட் உறுப்பினராக இருந்த அயர்லாந்து அணி கடந்த 2017 வாக்கில் டெஸ்ட் கிரிக்கெட் அணி என்ற அந்தஸ்தை பெற்றது. அந்த வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.
பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இவர் உள்ளார். கடந்த 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக 50 பந்துகளில் சதம் பதிவு செய்திருந்தார் கெவின். அது இன்றுவரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட அதிவேக சதமாக ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதோடு அந்தப் போட்டியில் அயர்லாந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.