
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்டவர் இஷான் கிஷான். கடந்தாண்டு வரை இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இடம்பிடித்து விளையாடி வந்த இஷான் கிஷான், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகினார். இருப்பினும் இஷான் கிஷானை உள்ளூர் போட்டிகளில் விளையாடும் படி பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது.
ஆனால் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்த இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கெண்டதும், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்ததன் காரணமாக கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கெண்டதன் விளைவாக இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.
மேற்கொண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் இஷான் கிஷன் பெரிதளவில் சோபிக்கமால் இருந்ததன் காரணமாக, மீண்டும் அவர் இந்திய அணிக்கு தேர்வாவது சந்தேகம் தான் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ள துலீப் கோப்பை தொடரில் ஜார்கண்ட் மாநில அணிக்காக இஷான் கிஷான் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த அணியின் கேப்டனாகவும் அவர் செயல்படவுள்ளதாக கூறப்படுகிறது.