
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44ஆவது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆனால் பேட்டிங் செய்ய களமிறங்கியதுமே டெல்லி அணி மிகப்பெரிய சரிவை சந்தித்தது. குறிப்பாக பவர்பிளே ஓவர்களுக்குள் 23 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி பரிதவித்தது. அந்த நேரத்தில் கைகோர்த்த அக்சர் பட்டேல் மற்றும் அமான் கான் ஆகியோர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு அணியை காப்பாற்றினார். பின்னர் அச்சர் பட்டேல் 27 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததும் அமான்கான் மற்றும் ரிப்பல் பட்டேல் ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணியை டீசன்ட்டான ரன் குவிப்பை நோக்கி அழைத்துச் சென்றனர்.
இறுதியில் அமான்கான் 51 ரன்கள், ரிப்பல் பட்டேல் 23 ரன்களையும் குவிக்க டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை குவித்தது. பின்னர் 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே குவித்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. சேஸிங்கில் எப்போதுமே மிகச் சிறப்பாக செயல்படும் குஜராத் அணி பெற்ற இந்து தோல்வி அவர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.