
ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 15ஆவது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்குகிறது. ஐபிஎல் 14 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் 5 முறை, சிஎஸ்கே 4 முறை என கோப்பைகளை வாரிக்குவித்துள்ள நிலையில், விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் என மிகப்பெரும் ஜாம்பவான்களை பெற்றிருந்தும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பரிதாபத்திற்குரிய அணி ஆர்சிபி.
2013ஆம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி, 9 சீசன்கள் அந்த அணியை வழிநடத்தினார். ஆனால் இந்த 9 சீசன்களில் ஒருமுறை கூட அவரால் அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.
அதிலும் 2016ஆம் ஆண்டு ஐபிஎல்லில் ஃபைனல் வரை சென்ற ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸிடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த சீசனில் விராட் கோலி உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். அந்த சீசனில் அவர் அடித்த 973 ரன்கள் தான், ஒரு ஐபிஎல் சீசனில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள்.