இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உள்நாட்டில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான ஐபிஎல் தொடரின் தாக்கம் உலகம் முழுவதும் பல கிரிக்கெட் வாரியங்களை இப்படியான டி20 தொடர்களை நடத்த வைத்திருக்கிறது.அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உள்நாட்டில் பி எஸ் எல் என்ற டி20 லீக்கை நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு முகமது ஹபிஸ் இடம் பெற்று இருந்த அணி கோப்பையை வென்றது. முகமது ரிஸ்வான் மற்றும் சதாப் கான் போன்ற பாகிஸ்தானுக்காக ஆடும் சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். ஆனால் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த பாபரின் செயல்பாடும் அந்த அணியின் செயல்பாடும் மோசமாகவே இருந்தது. அந்த அணிக்காக கடந்த சீசனில் 343 ரன்களை 38 ரன் சராசரியில் பாபர் எடுத்தார். ஆனால் அவரது ஸ்ட்ரைக் ரேட் மிக மோசமாக 118 என்று இருந்தது.
அதேசமயத்தில் ஒட்டுமொத்த பி எஸ் எல் லீக்கில் பாபர் 68 போட்டிகளில் 42 சராசரியில் 23 அரை சதங்கள் மற்றும் அதிகபட்ச ரன்னாக 90 ரன் என 2413 ரன்கள் குவித்து, இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையுடன் இருக்கிறார். பாபர் ஆஸம் இந்தத் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக ஒரு சீசனிலும், கராச்சி கிங்ஸ் அணிக்காக ஆறு சீசன்களிலும் விளையாடி உள்ளார். வரப்போகும் சீசனில் இவர் கராச்சி கிங்ஸ் அணியை விட்டு பெஷாவர் சல்மி அணிக்கு விளையாடுகிறார்.