
இன்று உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக போட்டியில் இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணிக்கு அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார். நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வேயுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 273 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்.
மேலும் 82 பந்துகளில் சதம் அடித்து ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு வேகமாக சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். இன்றைய போட்டியில் 96 பந்துகளை சந்தித்த ரச்சின் ரவீந்தரா 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 123 ரன்கள் அதிரடியாக அடித்து களத்தில் நின்றார்.
இவருடைய பூர்வீகம் இந்தியா ஆகும். இவரது தந்தை சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் இருவரது விசிறி. இதன் காரணமாக இவருக்கு பெயர் வைக்கும் பொழுது, இருவரது பெயரையும் இணைத்து ரச்சின் ரவீந்தரா என பெயர் வைத்திருக்கிறார்.