இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனில் உள்ளனர். இதனால் மூன்றாவது டெஸ்ட்டில் எந்த அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக பென் ஸ்டோக்ஸ் - பிராண்டன் மெக்கல்லம் தலைமையிலான இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை வழக்கத்திற்கு மாறாக டி20யை போல் அதிரடியாக விளையாடும் பாஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி பல வெற்றிகளை குவித்தது. இதனால் இங்கிலாந்து அணியின் பாஸ்பால் யுக்தி இந்தியாவில் எடுபடுமா என்ற கேள்விகள் எழுந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல் டெஸ்டில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
ஆனால் அதன்பின் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பாஸ்பல் யுக்தி இந்திய அணிக்கெதிராக எடுபடவில்லை. இதனால் அந்த அணி தோல்வியைத் தழுவியது. இருப்பினும் எங்களது ஆட்ட அணுகுமுறையை நாங்கள் மாற்றப்போவதில்லை என்று அந்த அணியின் பயிற்சியாளர், கேப்டன் உள்பட அணி வீரர்களும் உறுதியுடன் உள்ளனர்.