
12ஆவது சீசன் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லூசியா கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்திருந்த ஜான்சன் சார்லஸ் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாட்ராக் டெகார்ட்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸும் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரோஸ்டன் சேஸ் மற்றும் பனுகா ராஜபக்ஷா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடி வந்த ரோஸ்டன் சேஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் ராஜபக்ஷா 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்காத நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஸ்டன் சேஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன், சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கமானது கிடைக்கவில்லை.