
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ளார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 13ஆவது வீரர் மற்றும் 5ஆவது சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். மேற்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் குல்தீப் யாதவ் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் இப்பட்டியலில் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினையும் பின்னுக்கு தள்ளியுள்ளார்.