
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கு தொடர் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ளார். முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணியில் இடம்பிடித்திருந்த குல்தீப் யாதவ் அதன்பின் காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி இருந்தார்.