
இங்கிலாந்தின் உள்ளூரு கிரிக்கெட் தொடர்களில் பாரம்பரிய மிக்க தொடராக கருதப்படுவது கவுண்டி சாம்பியன்ஷிப். இதில் நடப்பு சீசனில் இன்று நடைபெற்ற இரண்டாவது டிவிஷன் கவுண்டி சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் லீசெஸ்டர்ஷைர் மற்றும் சசெக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லீசெஸ்டர்ஷைர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சசெக்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சசெக்ஸ் அணியானது கேப்டன் சிம்ப்சன் மற்றும் ஆலிவர் கார்டர் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 442 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக சிம்ப்சன் 183 ரன்களையும், ஆலிவர் கார்டர் 96 ரன்களையும் சேர்த்தனர். லீசெஸ்டர்ஷைர் அணி தரப்பில் ஹாலண்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் களமிறங்கிய லீசெஸ்டர்ஷைர் அணியில் பீட்டர் ஹண்ட்ஸ்கோம்ப் 92 ரன்களையும், வியான் முல்டர் 53 ரன்களையும் சேர்த்தாலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய காரணத்தால் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சசெக்ஸ் அணி தரப்பில் சீயன் ஹண்ட் 4 விக்கெட்டுகளையும், ஒல்லி ராபின்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் சசெக்ஸ் அணியானது 167 ரன்கள் முன்னிலைப் பெற்றது.