
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் டி20 தொடரின் ஐந்தாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கலே மார்வெல்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த் நிலையில், பதும் நிஷங்கா 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ் 7 ரன்களிலும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 11 ரன்களிலும், கேப்டன் சரித் அசலங்கா 4 ரன்களுக்கும், தனஞ்செயா டி சில்வா 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த அஸ்மதுல்லா ஒமார்ஸாய் ஓரவுளவு தாக்குப்பிடித்து ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 26 ரன்களைச் சேர்த்தார்.
அதேசமயம் தொடக்க வீரராக களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் மெண்டிஸ் சதமடித்து அசத்தியதுடன், 12 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 105 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைக் குவித்தது. கண்டி ஃபால்கன்ஸ் அணி தரப்பில் சதுரங்கா, ஹஸ்னைன் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கண்டி அணிக்கு தினேஷ் சண்டிமல் - ஆண்ட்ரே ஃபிளெட்சர் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.