
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஜாஃபனா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பதும் நிஷங்கா 3 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ் ரன்கள் ஏதுமின்றியும், மெற்றொரு தொடக்க வீரரான குசால் மெண்டிஸ் 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா 13 ரன்களுக்கும், தனஞ்செயா டி சில்வா 6 ரன்களுக்கும்,ஃபேபியன் ஆலன் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய விஜயகாந்த் வியாஸ்காந்த் ஓரளவு தாக்குப்பிடித்து 25 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் களமிறங்கிய பிரமோத் மதுஷன் 10, எஷான் மலிங்கா 15 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக ஜாஃப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது. கொழும்பு அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷதாப் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.