
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் மஹாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அபிஷேக் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய மஹாராஷ்டிரா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னிலும், அடுத்து வந்த சித்தேஷ் வீர் ரன்கள் ஏதுமின்றியும் என அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த அர்ஷின் குல்கர்னி மற்றும் அங்கித் பவ்னே இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களை கடந்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு 145 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
பின்னர் 60 ரன்கள் எடுத்த கையோடு அங்கிப் பவ்னே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாது 15 ரன்களுக்கும், அஸிம் காஸி 2 ரன்களுக்கும் என் ஆட்டமிழந்தனர். ஒருப்பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த அர்ஷின் குல்கர்னி சதமடித்து அசத்தினார். பின்னர் 107 ரன்களைச் சேர்த்த நிலையில் அவரும் விக்கெட்டை இழக்க, இறுதியில் நிகில் நாய்க் 52 ரன்களையும், சத்யஜீத் பச்சவ் 20 ரன்களையும் சேர்க்க மஹாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்களைக் சேர்த்தது.