
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவகையில் ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சிறப்பான தொடராக அமையவில்லை. ஏனெனில் அந்த அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளின் முடிவில் 6 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் விராட் கோலியைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் சரிவர சோபிக்காததே அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அதிலும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கிளென் மேக்ஸ்வெல் வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் காயம் காரணமாக கிளென் மேக்ஸ்வெல் விளையாடவில்லை என கூறப்பட்டது.
ஆனால், நேற்றைய போட்டியில் தனது மோசமான ஃபார்ம் காரணமாக கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸுடம் தனக்கு ஓய்வு கொடுத்து, தனக்கு பதில் வேறு வீரரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கடந்த சில போட்டிகளுக்குப் பிறகுதான் இப்படி ஒரு முடிவை எடுப்பது எனக்கு எளிதாக இருந்தது. கடைசியாக நடந்த போட்டியில் விளையாடியவுடன்,கேப்டன் டு பிளெசிஸ் மற்றும் பயிற்சியாளரிடம் சென்று எனக்கு பதிலாக வேறு யாரையாவது அணியில் முயற்சித்து பார்க்கலாம் என்றேன்.