
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய தினம் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் பிர்ஸ்பேன் அணி வீரர் மைக்கேல் நெசெர் லாவகமாக பிடித்த கேட்ச் தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்தும் இதற்கு அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் நியாயம் தான்.
209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் ஜோர்டன் சில்க் எனும் வீரர் ஆட்டத்தின் 18.2 ஓவரில் வைட் லைனில் வீசப்பட்ட பந்தை மிட் ஆன் திசையில் தூக்கி விளாசினார். அப்போது பவுண்டரி எல்லையில் நின்றிருந்த பிர்ஸ்பேன் அணி வீரர் மைக்கேல் நெசெர் லாவகமாக கேட்ச் பிடித்தார். பந்தை பிடித்தவுடன் தூக்கி எறிந்துவிட்டு வெளியே சென்ற அவர், மீண்டும் அதனை பிடித்து அசத்தினார். ஆனால் அவர் எப்படி பிடித்தார் என்பது தான் பிரச்சினையே ஆகும்.
பவுண்டரி எல்லையிலேயே அந்த பந்தை பிடித்த அவர், கால் கோட்டை தொட்டுவிடக்கூடாது என்பதற்காக பந்தை தூக்கி வீசிவிட்டு, பவுண்டரிக்கு வெளியில் சென்றார். தூக்கி விசிய பந்து பவுண்டரிக்கு வெளியே சென்றுவிட்டது. அப்போதும் மைக்கேலும் வெளியே சென்று, அங்கேயே குதித்து தரையில் கால் படாமல் பந்தை மீண்டும் பிடித்து தூக்கி களத்திற்கு வீசினார். பின்னர் மீண்டும் களத்திற்குள் ஓடி வந்து கேட்ச் பிடித்தார். பவுண்டரிக்கு வெளியே ஒரு கேட்ச்-ஐ பிடித்தது அவுட்டா? நாட் அவுட்டா? என்ற குழப்பம் எழுந்தது. ஆனால் அதற்கு அம்பயர்கள் அவுட் என முடிவு கொடுத்தனர்.