 
                                                    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி மே மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
இதில் ஆடவருக்கான பரிந்துரை பட்டியலில் ஐசிசி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்காட்லாந்தின் பிராண்டன் மெக்முல்லன், அமெரிக்க அணியின் மிலிந்த் குமார் மற்றும் வங்கதேச டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐக்கிய அரபு அமீரக அணி கேப்டன் முகமது வசீம் அகியோரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இதில் பிராண்டன் மெக்முல்லன் கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் 258 ரன்களைச் சேர்த்துள்ளார்.
மேலும் இதில் அவர் இரண்டு அரைசதங்களையும், ஒரு சதத்தையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு பந்துவீச்சிலும் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதுதவிர்த்து இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள மிலிந்த் குமார் கடைசியாக விளையாடிய நான்கு ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் 67 என்ற சராசரியுடன் 201 ரன்களையும், பந்துவீச்சில் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        