Advertisement

உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; காலதாமதம் காரணமாக ஆட்டமிழந்த மேத்யூஸ்!

145 வருட சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் காலதாமதம் காரணமாக அவுட்டான முதல் வீரர் எனும் மோசமான சாதனையை இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 06, 2023 • 17:11 PM
உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; காலதாமதம் காரணமாக ஆட்டமிழந்த மேத்யூஸ்!
உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; காலதாமதம் காரணமாக ஆட்டமிழந்த மேத்யூஸ்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. ஏற்கனவே உலகக் கோப்பையிலிருந்து அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறிய இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றி பெறுவதற்காக இந்த சம்பிரதாய போட்டியில் மோதின. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு ஆரம்பத்திலேயே குஷால் பெரேரா 4 ரன்களில் அவுட்டானார்.

அந்த நிலைமையில் வந்த கேப்டன் குஷால் மெண்டிஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் நிசாங்காவும் போராடி 41 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதை தொடர்ந்து சமரவிக்ரமா 41 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் ஷாகிப் அல் ஹசன் சுழலில் போராடி அவுட்டானார்.

Trending


அப்போது இலங்கையின் நம்பிக்கை நட்சத்திர அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்தியூஸ் பேட்டிங் செய்வதற்காக களமிறங்கினார். ஆனால் களத்திற்குள் வந்த பின் தம்முடைய ஹெல்மெட்டின் பாதுகாப்பு கயிறு சரியாக இல்லாமல் இருப்பதை கவனித்த அவர் மீண்டும் வேறு ஹெல்மெட்டை தங்களது அணி வீரர்களிடமிருந்து வாங்க முயற்சித்தார். குறிப்பாக பவுண்டரிக்குள் வந்து விட்டு பிட்ச் இருக்கும் பகுதிக்கு செல்வதற்கு முன்பாகவே நடு மைதானத்தில் அவர் அதை செய்து கொண்டிருந்த சமயத்தில் 3 நிமிடம் முடிந்து போனது.

அப்போது களத்திற்குள் வந்தும் முதல் பந்தை எதிர்கொள்ள தாமதப்படுத்துகிறார் என்று வங்கதேச அணியினர் அவர் மீது புகார் செய்தது மட்டுமல்லாமல் நடுவரிடம் அவுட்டும் கேட்டார்கள். அதை பரிசீலித்த நடுவர்கள் அடிப்படை விதிமுறைப்படி மேத்யூஸ் அவுட் என்று அறிவித்தது ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஏனெனில் 145 வருட சர்வதேச கிரிக்கெட்டின் வரலாற்றில் இதற்கு முன் எந்த வீரரும் காலதாமதம் காரணமாக அவுட்டானதே கிடையாது. அதாவது ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாகி அல்லது காயமடைந்து வெளியே சென்ற பின் மற்றொரு பேட்ஸ்மேன் அடுத்த 3 நிமிடத்திற்குள் வந்து முதல் பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் ஹெல்மெட் பழுதானதால் அந்த விதிமுறையை அறியாமல் மீறிய மேத்யூஸ் காலதாமதத்தால் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார்.

மறுபுறம் மேத்யூஸ் வேண்டுமென்றே அவ்வாறு செய்யாத நிலைமையில் நேர்மைதன்மையை கொஞ்சமும் யோசிக்காத வங்கதேசம் இப்படி ஒரு மனசாட்சியற்ற செயலை செய்துள்ளது. குறிப்பாக நிலைமையை மேத்யூஸ் எடுத்துச் சொல்லியும் வங்கதேச கேப்டன் ஷாகிப் கொஞ்சமும் இரக்கம் காட்டாமல் அடம் பிடித்ததால் நடுவர் அவுட் கொடுத்தது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement