
ஐபிஎல் தொடரைப் போன்றே தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் அந்த நாட்டில் டி20 கிரிக்கெட் போட்டி முதல்முறையாக நடத்தப்படுகிறது. இத்தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை நடக்கிறது. 'எஸ்.ஏ. 20' என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டியில் குயின்டான் டி காக் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ், வெய்ன் பார்னெல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். மொத்தம் ரூ.32¾ கோடி பரிசுத் தொகைக்கான இந்த கிரிக்கெட் திருவிழாவில், காயத்தில் இருந்து மீண்டு இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டன், ஜோஸ் பட்லர், ஜாசன் ராய், இயான் மோர்கன், அடில் ரஷித் (இங்கிலாந்து), ஜாசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப் (வெஸ்ட்இண்டீஸ்), தீக்ஷனா, குசல் மென்டிஸ் (இலங்கை), ஹென்ரிச் கிளாசென், கைல் வெரைன், ரோசவ், வான்டெர் டஸன், ககிசோ ரபடா, அன்ரிச் நோர்ட்ஜே, மார்கோ ஜேன்சன் (தென்ஆப்பிரிக்கா) உள்பட நட்சத்திர வீரர்கள் வரிந்து கட்டுகிறார்கள்.
தென்ஆப்பிரிக்காவின் நகரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 6 அணிகளையும் ஐபிஎல். அணியின் உரிமையாளர்கள் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஜோபர்க் சூப்பர் கிங்சை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வசப்படுத்தி இருக்கிறது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் உள்ளார். வெளிநாட்டு லீக் போட்டிகளில் கலந்து கொள்ள இந்திய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இந்த போட்டிக்கான அணிகளில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை.