
இந்தியா - இலங்கை இடையேயான ஒருநாள் தொடரை 2-1 என வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடிவரும் அதேவேளையில், இலங்கை அணியோ சொந்த மண்ணில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. இந்திய அணியை டி20 போட்டியில் 164 ரன்களுக்கு கட்டுப்படுத்தினாலும், அந்த இலக்கையே அடிக்கமுடியாமல் 126 ரன்களுக்கு 19ஆவது ஓவரிலேயே ஆல் அவுட்டாகி தோற்றது இலங்கை அணி.
இந்த தொடரில் இலங்கை அணிக்கு ஒரே மன ஆறுதலாக இருப்பது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா தான். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பெரிதாக எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. ஆனாலும் திறமைகளை அடையாளம் காண்பதில் வல்லவரான ராகுல் டிராவிட், துஷ்மந்தா சமீரா தன்னை வெகுவாக கவர்ந்துவிட்டதாக இலங்கை பயிற்சியாளரிடம் கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது.