
நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இந்தியாவுக்காக ஐசிசியின் 3 விதமான கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சரித்திர சாதனை படைத்துள்ளார். அதே போல இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற இலக்கணம் உருவாகும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு, மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர், நிறைய போட்டிகளில் அழுத்தமான மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று வரலாற்றின் மிகச்சிறந்த ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார்.
அதே போல தற்போதைய அணியில் இருக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முக்கிய வீரர்களுக்கு அப்போதே சீனியர்களை கழற்றி விட்டு வாய்ப்பு கொடுத்து வளர்த்த அவர் இந்தியாவின் வருங்காலத்தை வளமாக கட்டமைத்த பெருமைக்குரியவர். அப்படி இந்திய கிரிக்கெட்டின் மகத்தான ஜாம்பவானாக போற்றப்படும் அவர் 2019இல் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதில் கடந்த வருடம் 9ஆவது இடத்தை பிடித்த சென்னை இம்முறை அவரது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு 5ஆவது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி மும்பையின் ஆல் டைம் சாதனையும் சமன் செய்தது.
குறிப்பாக தம்மை விட வயது குறைந்த பல வீரர்கள் ஃபிட்னஸ் இல்லாமல் தடுமாறும் நிலைமையில் அத்தொடரில் 42 வயதிலும் முழங்கால் வலியுடன் விளையாடிய அவர் அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாகவே செயல்பட்டார். தற்போது முழங்கால் வலிக்கு சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் அவர் தன்னுடைய சொந்த ஊரான ராஞ்சியில் இருந்து வருகிறார். பொதுவாகவே களத்தில் வித்தியாசமான முடிவுகளை எடுக்கும் தோனி தம்முடைய வாழ்விலும் பல அம்சங்களில் மிகவும் தனித்துவமாகவே இருப்பது வழக்கமாகும்.