Advertisement

தோல்விக்கான காரணம் குறித்து விளக்கிய சஞ்சு சாம்சன்!

எனக்கு தெரிந்து, தோல்விக்கு பின் கேப்டனாக பேசுவதே இந்த தொடரில் கடினமாக விஷயம் என்று நினைக்கிறேன் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 11, 2024 • 12:45 PM
தோல்விக்கான காரணம் குறித்து விளக்கிய சஞ்சு சாம்சன்!
தோல்விக்கான காரணம் குறித்து விளக்கிய சஞ்சு சாம்சன்! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது. 

இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கம் ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் 10 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

Trending


இதில் இருவரும் அரைசதம் கடக்க, 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 68 ரன்களையும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 76  ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் ரஷித் கான், உமேஷ் யாதவ், மோஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்களைச் சேர்த்திருந்த சாய் சுதர்ஷன் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேத்யூ வேட் 4 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த ஷுப்மன் கில் 72 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாலும், இறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திவேத்தியா, ரஷித் கான் இருவரும் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “இந்த ஆட்டத்தில் நாங்கள் எப்படி தோற்றோம் என்றால், குஜராத் அணி வெற்றிக்கு கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. அதனை அவர்கள் எட்டி வெற்றிபெற்றார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சூழலில் பேசுவதே கடினமாக உள்ளது. எனக்கு தெரிந்து, தோல்விக்கு பின் கேப்டனாக பேசுவதே இந்த தொடரில் கடினமாக விஷயம் என்று நினைக்கிறேன்.

இப்போட்டியில் அடைந்த தோல்வியின் காரணமாக நான் பதற்றதுடன் உள்ளேன். சாதாரண நிலைக்கு வந்த பின், நிச்சயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவினோம் என்று கூறுவேன். நிச்சயம் குஜராத் அணியினரை பாராட்ட வேண்டும். இதுதான் இந்த தொடரின் அழகே. இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று, அடுத்த போட்டிக்கு நகர வேண்டும். நான் பேட்டிங் செய்யும் போது இந்த மைதானத்தில் 180 ரன்கள் எடுத்தாலே, சவாலாக ஸ்கோராக நினைத்தேன்.

நிச்சயம் 196 ரன்கள் என்பது வெற்றிக்கான இலக்கு தான். பெரிதாக பனிப்பொழிவு இல்லாத போது, எங்கள் பவுலர்கள் செய்து முடித்திருக்க வேண்டும். நிச்சயம் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடுவது எளிதல்ல. 197 ரன்கள் இலக்கு, அதிலும் பனிப்பொழிவு வராது என்றால், அந்த ஸ்கோரை நாங்கள் தாராளமாக எடுத்துக் கொள்வோம். இப்போட்டியின் பந்துவீச்சில் நாங்கள் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement