
காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஆல் அவுட்டானது.
இதையடுத்து களமிறங்கிய நேபாள அணியில், 17 வயதான குல்ஷன் ஜா 84 பந்துகளில் குவித்த 67 ரன்கள் நேபாள அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதன்மூலம் நேபாள கிரிக்கெட் அணி, செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பை போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது, மேலும் அந்த அணி குரூப் ஏ வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது முதலே அது இந்தியாவில் கடும் விவாதத்துக்கு உள்ளானது. இரண்டு நாடுகளுக்கும் பொதுவான ஒரு இடத்தில் இத்தொடரை வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. ஆசியக் கோப்பையில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்று ஏசிசி தலைவர் ஜெய்ஷா கடந்த ஆண்டே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.