
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களையும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்க தவறியதால் 177 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது குல்தீப் யாதவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய துருவ் ஜுரெல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார்.
அதிலும் தனது அரைசதத்திற்கு பிறகு அதிரடியாக விளையாடிய துருவ் ஜுரெல் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், தனது முதல் சதத்தையும் நெருங்கிக்கொண்டிருந்தார். ஆனால் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 90 ரன்களைச் சேர்த்திருந்த துருவ் ஜுரெல் விக்கெட்டை இழந்து 10 ரன்களில் தனது சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.