டி20 உலகக்கோப்பை: தொடர் நாயகன் பட்டியலில் விராட், சூர்யா!
டி20 உலக கோப்பை தொடர் நாயகன் விருதுக்காக 9 வீரர்களை தேர்வு செய்து ஐசிசி வெளியிட்டுள்ளது.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி நாளை மெல்போர்னில் நடைபெறுகிறது.
இந்த டி20 உலக கோப்பையின் தொடர் நாயகனை ரசிகர்களே தேர்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளது ஐசிசி. அதற்காக இந்த தொடரில் சிறப்பாக ஆடிய, தொடர் நாயகன் விருதுக்கு தகுதியான 9 வீரர்களை தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளது ஐசிசி. டி20 உலக்கோப்பை இணையத்தில் வீரர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம். அதில் அதிக வாக்குகளை பெற்றவர் தொடர் நாயகன் விருதை வெல்வார்.
தொடர் நாயகன் விருதுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து தலா 2 வீரர்கள், அதிகபட்சமாக இங்கிலாந்திலிருந்து 3 வீரர்கள், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே வீரர் ஒருவர் என மொத்தம் 9 வீரர்களை ஐசிசி தொடர் நாயகன் விருதுக்கு தேர்வு செய்து பட்டியலிட்டுள்ளது.
இந்த டி20 உலக கோப்பையில் 4 அரைசதங்களுடன் அதிக ரன்களை குவித்த விராட் கோலி(296 ரன்கள் இறுதிப்போட்டிக்கு முன்வரை) மற்றும் சூர்யகுமார் யாதவ் (239 ரன்கள்) ஆகிய இருவரும் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணிக்காக பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஷதாப் கான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய 2 பாகிஸ்தான் வீரர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன், தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ்ஆகிய 3 இங்கிலாந்து வீரர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா மற்றும் ஜிம்பாப்வே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராஸா ஆகியோரும் தொடர் நாயகனுக்கான பட்டியலில் உள்ளனர். இவர்களில் யார் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று ரசிகர்கள் நினைக்கின்றனரோ, ரசிகர்களே வாக்களித்து தேர்வு செய்யலாம்.
Win Big, Make Your Cricket Tales Now