Advertisement

அந்த நோபால் எங்களது வெற்றியைப் பறித்துவிட்டது - சஞ்சு சாம்சன்!

இதுபோன்ற போட்டிகள் தான் ஐபிஎல் தொடரின் மிக ஸ்பெஷலான போட்டியாக மாறுகிறது என ஹைதராபாத் அணிக்கெதிரான தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan May 08, 2023 • 13:22 PM
“No-ball ruined our result,” says Sanju Samson
“No-ball ruined our result,” says Sanju Samson (Image Source: Google)
Advertisement

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 52ஆவது லீக் போட்டியானது ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 214 ரன்கள் குவித்து அசத்தியது. ராஜஸ்தான் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 95 ரன்கள், சஞ்சு சாம்சன் 66 ரன்களையும் குவித்து அசத்தினர்.

Trending


பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. அதிலும் குறிப்பாக கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவை என்ற நிலையில் கிளென் பிலிப்ஸ் மற்றும் அப்துல் சமாத் ஆகியோரது அதிரடி காரணமாக சன் ரைசர்ஸ் அணி அசத்தலான வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், “இதுபோன்ற போட்டிகள் தான் ஐபிஎல் தொடரின் மிக ஸ்பெஷலான போட்டியாக மாறுகிறது. நான் இறுதி ஓவர் வீசும்போது சந்தீப் சர்மா மீது அதிக நம்பிக்கையில் இருந்தேன். எப்போதுமே ஒரு போட்டி முடியும் வரை நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று நினைக்கவே முடியாது.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சந்தீப் சர்மா மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு வெற்றியை பெற்று தந்தார். இந்த போட்டியிலும் அவர் சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு இறுதி நேரத்தில் வெற்றி வாய்ப்பினை தந்தார். ஆனாலும் நோபால் வந்து கடைசி நேரத்தில் எங்களது வெற்றியை பறித்து விட்டது. ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடரில் விளையாடுவது எளிதான காரியம் கிடையாது.

ஒவ்வொரு போட்டியிலுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் வெற்றி பெற முடியும். இந்த போட்டியில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement