
வெகு நாட்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்த சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்மாத இறுதியில் நடைபெற உள்ள அயர்லாந்துக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.
ரிஷப் பந்த், இஷான் கிஷான், மற்றும் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் போன்ற பல விக்கெட் கீப்பர்-பேட்டர்கள் 27 வயதான சஞ்சு சாம்சனை விட மிகவும் நிலைத்தன்மையுடன் சிறப்பாக விளையாடுவதால், டி20 உலகக் கோப்பையில் சாம்சனை சேர்ப்பது கடினமான பணியாக இருக்கும்.
சாம்சன் ஆட்டம் சிறப்பானதாக பல சமயங்களில் அமைந்தபோதிலும் அவை சீரற்ற முறையில் வந்ததே இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காமல் போக முக்கியக் காரணம். இதுவரை சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக ஒரு ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் முறையே 46 மற்றும் 174 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், சாம்சனின் திறமைகளில் நம்பிக்கை கொண்டுள்ளார், ஆனால் அவர் தனது ஷாட் தேர்வை மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறார்.