
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்தார். லக்னோ அணி சார்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து கடின இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. இப்போட்டியின் இறுதி வரை போராடிய நிக்கோலஸ் பூரன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 58 ரன்களைச் சேர்த்திருந்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பெற்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், “இது தொடரின் முதல் போட்டி என்பதால் இதற்காக நாங்கள் பெரிதளவில் எந்த திட்டத்தையும் தயார்செய்யவில்லை. பவர்பிளேவின் ரன்களை கட்டுப்படுத்துவது என்பது ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானது, ஆனால் எந்த அணியும் இதுவரை அதை சரியாக செய்யவில்லை என்று நினைக்கிறேன். மெஹ்சின் கான் எங்களது முதல் சீசனில் அணியின் பவர்பிளே பந்துவீச்சாளராக இருந்தார்.