
இன்று உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லாத வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி டெல்லி மைதானத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு குசால் பெரேரா மற்றும் தனஞ்செயா இருவரும் சேர்க்கப்பட்டார்கள்.
இந்த நிலையில் இலங்கை அணிக்கு குசால் பெரேரா 4, குசால் மெண்டிஸ் 19, பதும் நிஷங்கா 41, சதிரா 41 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து அனுபவ வீரர் அஞ்சலோ மேத்யூஸ் விளையாட வந்தார். இந்த நிலையில் உள்ளே வந்த அவர் இரண்டு நிமிடங்களுக்கு மேல் விளையாட நேரம் எடுத்த காரணத்தினால், பங்களாதேஷ் கேப்டன் நடுவர்களிடம் முறையிட அவர் டைம் அவுட் முறையில் அவுட் என்று தீர்மானிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இது தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய சரித் அசலங்கா 105 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து வந்த தனஞ்செயா 34, தீக்ஷனா 22 ரன்கள் எடுக்க 49.3 ஓவரில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் சேர்த்தது.