
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 14) தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டம் லேதம் மற்றும் வில் யங் இணை தொடக்கம் கொடுத்தர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 43 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த டாம் லேதமும் 63 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் 44 ரன்னில் கேன் வில்லியம்சனும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல், டாம் பிளெண்டல், கிளென் பிலீப்ஸ், மேட் ஹென்றி உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மிட்செல் சான்ட்னர் - டிம் சௌதீ இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டிம் சௌதீ ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 23 ரன்னில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் மிட்செல் சான்ட்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை மிட்செல் சான்ட்னர் 50 ரன்களுடனும், வில்லியம் ஓ ரூர்க் ரன்கள் ஏதுமின்றியும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர்.