
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டொய்னிஸ், நேஹால் வதேரே, கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் பிரியான்ஷ் ஆர்யா சதமடித்ததுடன் 103 ரன்களையும், ஷஷாங்க் சிங் 52 ரன்களையும் சேர்க்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்களைக் குவித்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே 69 ரன்களையும், ஷிவம் தூபே 42 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 36 ரன்களையும், இறுதியில் அதிரடியாக விளையாடிய எம் எஸ் தோனி 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, சிஎஸ்கே அணி 201 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.