
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக சைம் அயூப் 58 ரன்களையும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களையும் அகா சல்மான் 54 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொர்ற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முத இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது லிட்டன் தாஸின் சதத்தின் மூலமும், மெஹிதி ஹசனின் அரைசதத்தின் மூலமாகவும் 262 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 138 ரன்களையும், மெஹிதி ஹசன் 78 ரன்களையும் சேர்த்தனர்.
பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய குர்ரம் ஷஷாத் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 12 ரன்கள் முன்னிலையுடன், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக், குர்ராம் ஷஸாத் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 9 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை சைம் அயுப் 6 ரன்களுடனும், கேப்டன் ஷான் மசூத் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர்.