
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிரௌலி மற்றும் பென் டக்கெட் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். அதிரடியாக பேட்டிங் ஆடிய இருவருமே சதமடிக்க, முதல் விக்கெட்டுக்கு வெறும் 35.4 ஓவரில் 233 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. பென் டக்கெட் 107 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜாக் கிரௌலி 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் 3ஆம் வரிசையில் இறங்கிய ஒல்லி போப்பும் அபாரமாக பேட்டிங் செய்தால். ஆனால் சீனியர் வீரர் ஜோ ரூட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒல்லி போப் மற்றும் 5ஆம் வரிசையில் இறங்கிய ஹாரி ப்ரூக் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் விளையாடி சதமடிக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 506 ரன்களை குவித்து சாதனை படைத்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். மேலும் முதல் நாளில் 4 வீரர்கள் சதமடித்ததும் இதுவே முதல்முறையாகும்.