
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- சைம் அயூப் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத், ஷஃபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பொறுப்புடன் விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். அதன்பின் ஷஃபீக் 102 ரன்களிலும், கேப்டன் மசூத் 151 ரன்னில் என வெளியேறினார்.அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சௌத் சகீல் 82 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் சதமடித்து அசத்தியதுடன் 104 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலிவுடன் இணைந்து கேப்டன் ஒல்லி போப் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் இப்போட்டியில் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஒல்லி போப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஸாக் கிரௌலியுடன் இணைந்த ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய கிராலி அரை சதம் விளாசினார். இதன்மூலம் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 96 ரன்கள் எடுத்தது.