
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 20 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், நேற்றைய தினம் இப்போட்டியும் ராவல்பிண்டிக்கு மாற்றப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே பாகிஸ்தான் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளந்து. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் அமீர் ஜமால் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்த அமீர் ஜமால் காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். இந்நிலையில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.