1-mdl.jpg)
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று புனே நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் எளிதாக தோற்கடித்தது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சுமாராக விளையாடி 49.3 ஓவரில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக நிசாங்கா 46, கேப்டன் குசால் மெண்டிஸ் 39 ரன்கள் எடுக்க ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஃபரூக்கி 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 242 இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தானுக்கு ரஹமனுல்லா குர்பாஸ் டக் அவுட்டான போதிலும் மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் 39 ரன்கள் எடுத்தார்.
அதை பயன்படுத்தி மிடில் ஆர்டரில் ரஹ்மத் ஷா 62, கேப்டன் ஷாஹிதி 58, ஓமர்சாய் 73 ரன்களை விளாசி 45.2 ஓவரிலேயே ஆஃப்கானிஸ்தானை வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. மேலும் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகளை தோற்கடித்த ஆஃப்கானிஸ்தான் தற்போது இலங்கையையும் தோற்கடித்து 3ஆவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.