
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இதைத்தொடர்ந்து கேப்டன் பாபர் ஆசாமும் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். பின்னர் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷஹீன் அஃப்ரிடியும், டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷான் மசூத் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கேப்டன் ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி தங்களது முதல் டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14 முதல் 18 வரையும் , 2ஆவது போட்டி டிசம்பர் 26 முதல் 30 வரையும், 3ஆவது போட்டி ஜனவரி 03 முதல் 07 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.