
இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் மற்றும் நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்வதற்கு ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் இலக்காக உள்ளது. ஆனால் அந்த இலக்கை இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் கடினமாக மாற்றி வருகின்றனர். ஏனெனில் மூன்றாவது நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி வெறும் 71 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிலும் குறிப்பாக மதிய உணவுக்கு முன், ஆஸ்திரேலிய அணி சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் மூன்று விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா வீழ்த்தினார். அதிலும் சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் சுமாரான பந்தில் விக்கெட்டை இழக்க, ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட் மட்டும் பிரஷித் கிருஷ்ணாவின் மிகவும் அற்புதமான பந்தில் வந்தது.
அதன்படி ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 10ஆவது ஓவரை பிரஷித் கிருஷ்ணா வீசிய நிலையில், ஓவரின் கடைசி பந்தை ஸ்டீவ் ஸ்மித் எதிர்கொண்டார். அந்த பந்தை பிரஷித் கிருஷ்ணா பவுன்சராக வீசிய நிலையில் அது கூடுதல் பவுன்சாகி ஸ்மித்தின் முகத்திற்கு நேராக சென்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டீவ் ஸ்மித் அதனை தடுக்கும் முயற்சியில் பேட்டை நீட்ட, அது பேட்டில் எட்ஜாகி கல்லி திசையில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் கைகளில் தஞ்சமடைந்தது.