
ஒன்பதாவது சீசன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 22அவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
இதையடுத்து களமிறங்கிய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - சௌத் சகீல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஜேசன் ராய் 15 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சௌத் சகீல் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 33 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கவாஜா நஃபே 17 ரன்களையு, அகீல் ஹொசைன் 14 ரன்களையும், கேப்டன் ரைலீ ரூஸோவ் 10 ரன்களையும் சேர்த்ததைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கராச்சி அணி தரப்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.