
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பல்வேறு இளம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை அடையாளம் காட்டியுள்ளது. குறிப்பாக ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா, நேஹல் வதேரா, துருவ் ஜுரேல், அனுஜ் ராவத் போன்ற வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலகிற்கு தெரிந்துள்ளனர். ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்கு பினிஷிங் ரோலில் விளையாடி வருகிறார். 13 போட்டிகளில் 3 அரைசதங்கள் உட்பட 400 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளார்.
ஜெய்ஸ்வால் கிட்டத்தட்ட 600 ரன்களை எட்டி அதிக ரன்கள் அடித்தவர்களில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார். இதில் நான்கு அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். இவர்களுக்கு மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படாத பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் பிரப்சிம்ரன் இந்த வருட ஐபிஎல்லில் மிகச்சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஒரு சதம் அடித்திருக்கிறார் மற்றும் இந்த தொடரில் இரண்டு அரைசதங்களும் அடித்திருக்கிறார். 13 போட்டிகளில் 330 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறார்.
இந்த சீசனின் முதல் பாதியில் எதிர்பார்த்த அளவிற்கு இவர் செயல்படவில்லை. ஆனால் அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இரண்டாம் பாதியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது பேட்டிங்கை வானுயரப் புகழ்ந்து இந்திய அணியின் எதிர்காலமாக இருப்பார் என்றும் பேசியுள்ளார் முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான்.