
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்தரா இதுவரை இல்லாத ஒரு சாதனையை படைத்திருக்கிறார். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோரின் பெயரை கொண்டுள்ள இவர் இருவரையும் போலவே மகத்தான சாதனைகளை படைத்து வருகிறார்.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாக 35ஆவது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு மிகவும் சிறிய மைதானம் என்பதால் எவ்வளவு பெரிய இலக்கை வேண்டுமானாலும் துரத்தலாம். இதனால் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியது. இந்த போட்டியில் தொடக்க வீரராக டிவோன் கான்வேயுடன் ரச்சின் ரவீந்திரா விளையாடினார்.
இதில் கான்வே 35 ரன்களில் வெளியேற இரண்டாவது விக்கெட்டுக்கு வில்லியம்சன்னுடன் ரச்சின் ரவீந்திரா இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினார். ரச்சின் ரவீந்திரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். ஒரு பக்கம் கேன் வில்லியம்சன் 79 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து பெவிலியின் திரும்ப ரவீந்திரா 88 பந்துகளில் எல்லாம் சதம் அடித்து அசத்தினார்.