சாம்பியன்ஸ் கோப்பை 2025: தனித்துவ சாதனைகளை படைத்த ரச்சின் ரவீந்திரா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.

நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா மற்றும் அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதில் ரச்சின் ரவீந்திரா 108 ரன்களையும், கேன் வில்லியம்சன் 102 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோர் தலா 49 ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி இமாலய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவிந்திரா சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.
முதல் நியூசிலாந்து வீரர்
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரச்சின் ரவீந்திர விளாசிய இரண்டாவது சதம் இதுவாகும். இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் இரண்டு சதங்களை விளாசிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை படைத்தார். இதற்கு முன்பு வங்கதேச அணிக்கு எதிராக ராவல்பிண்டியில் நடைபெற்ற லீக் போட்டியில் ரச்சின் ரவீந்திரா 112 ரன்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
உலகின் முதல் பேட்டர்
தற்போது 25 வயதான ரச்சின் ரவீந்திரா தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 5 சதங்களை அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த அனைத்து சதங்களையும் அவர் ஐசிசி தொடர்களில் மட்டுமே அடித்துள்ளார். இதன்மூலம் ஐசிசி தொடர்களில் தனது அனைத்து ஒருநாள் சதங்களையும் அடித்த உலகின் முதல் வீரர் எனும் தனித்துவ சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, ஐசிசி போட்டியில் அதிவேகமாக 5 சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாக் காலிஸ் மற்றும் உபுல் தரங்கவின் சாதனையை முறியடித்தார்
Also Read: Funding To Save Test Cricket
ஐசிசி ஒருநாள் தொடர் வரலாற்றில் 25 வயதிற்குள் அதிக 50+பிளஸ் ஸ்கோரை அடித்ததன் அடிப்படையில் ரச்சின் ரவீந்திரா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் தனது 13ஆவது இன்னிங்ஸில் தனது 7ஆவது 50+ பிளஸ் ஸ்கோரை அடித்தார். இதன்மூலம் இந்தப் பட்டியலில், தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் (17 இன்னிங்ஸில் 6 முறை), இலங்கையின் உபுல் தரங்கா (17 இன்னிங்ஸில் 6 முறை) ஆகியோரை ரச்சின் பின்னுக்குத் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now