Advertisement

ரஞ்சி கோப்பை வரலாற்றில் சேஸிங்கில் புதிய சாதனை படைத்த ரயில்வேஸ் அணி!

திரிபுரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை தொடரில் ரயில்வேஸ் அணி 378 ரன்கள் என்ற இலக்கை எட்டி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 19, 2024 • 22:04 PM
ரஞ்சி கோப்பை வரலாற்றில் சேஸிங்கில் புதிய சாதனை படைத்த ரயில்வேஸ் அணி!
ரஞ்சி கோப்பை வரலாற்றில் சேஸிங்கில் புதிய சாதனை படைத்த ரயில்வேஸ் அணி! (Image Source: Google)
Advertisement

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எலைட் குரூப் சி பிரிவில் இடம்பிடித்திருந்த ரயில்வேஸ் - திரிபுரா அணிகள் தங்களது கடைசி லீக் போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ரயில்வேஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய திரிபுரா அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரயில்வேஸ் அணி தரப்பில் யுவ்ராஜ் சிங் 4 விக்கெட்டுகளையும், ஹிமான்ஷு சங்வான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ரயில்வேஸ் அணியில் அரிந்தம் கோஷ் 62 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் ரயில்வேஸ் அணி 37.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திரிபுரா அணி தரப்பில் முராசிங் 5 விக்கெட்டுகளையும், பிக்ரம்ஜித் தெப்நாத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Trending


அதன்பின் 44 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய திரிபுரா அணியில் சுதிப் சட்டர்ஜீ 95 ரன்களையும், சதிஸ் 62 ரன்களையும், அபிஜித் சர்கார் 48 ரன்களையும் சேர்க்க, அந்த அணி 333 ரன்களைக் குவித்தது. ரயில்வேஸ் அணி தரப்பில் யுவராஜ் சிங், ஹிமான்ஷு சங்வான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் ரயில்வேஸ் அணிக்கு 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ரயில்வேஸ் அணியில் 31 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த பிரதாம் சிங் - முகமது சைஃப் இணை அதிரடியாக விளையாடியதுடன் இருவரும் சதமடித்தும் அசத்தினர். அதன்பின் முகமது சைஃப் 106 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரதாம் சிங் 169 ரன்களை குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் ரயில்வேஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்காகவும் இது அமைந்தது. இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் உத்திர பிரதேச அணிக்கெதிரான போட்டியில் சௌஷ்டிரா அணி 372 ரன்கள் என்ற இலக்கை எட்டியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ரயில்வேஸ் அணி அச்சாதனையை முறியடித்துள்ளது. 

ரஞ்சி கோப்பை தொடரில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு

  • ரயில்வேஸ் - 378/5 திரிபுரா அணிக்கு எதிராக 
  • சௌராஷ்டிரா- 372/5 உத்தரப் பிரதேசத்திற்கு எதிராக (2019-20)
  • அஸ்ஸாம்- 371/4 சர்வீசஸ் அணிக்கு எதிராக (2008-09)
  • ராஜஸ்தான்- 360/4 விதர்பா அணிக்கு எதிராக (1989-90)
  • உத்தரப் பிரதேசம்- 359/4 மகாராஷ்டிராவுக்கு எதிராக( 2021-22)


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement